கியூபெக் மாகாணத்தில் வீடற்ற நிலையில் வீதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகப் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு இறுதி வரையிலான காலப்பகுதியில் இந்த பாரிய உயர்வு ஏற்பட்டுள்ளமை சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கியூபெக் அரசாங்கத்தின் அண்மைய அறிக்கையின்படி, மாகாணம் முழுவதும் தற்போது 12,000-க்கும் மேற்பட்டோர் நிரந்தர வீடின்றி வீதிகளிலும் தற்காலிக முகாம்களிலும் வசிக்கின்றனர்.
கியூபெக்கின் மொத்த வீடற்றோரில் சுமார் 50 சதவீதமானோர் மொன்றியல் தீவிலேயே வசிக்கின்றனர்.
குறிப்பாக நகரின் மையப்பகுதிகளில் இவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.
மொன்றியலுக்கு வெளியே தெற்கு கரை (South Shore) மற்றும் அவுட்டாவே (Outaouais) போன்ற பகுதிகளிலும் வீடற்றோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாதவாறு உயர்ந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் வீட்டு வசதி தட்டுப்பாடு ஆகியவையே இந்த நிலைக்கு முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
கியூபெக் அரசு தனது ‘வீடற்றோருக்கான சிறப்புத் திட்டத்தை’ (Action Plan on Homelessness) மறுபரிசீலனை செய்யப் போவதாக அறிவித்துள்ள போதிலும், அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கைகள் தேவை என மக்கள் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத் தக்கது.
