மொன்றியல் மாநகரசபையில் பணிபுரியும் சுமார் 6,000 ஊழியர்கள், எதிர்வரும் செப்டம்பர் 14 முதல் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து பணியாற்ற வேண்டும் என மாநகரசபை நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள வாரத்தில் இரண்டு நாட்கள் என்ற முறையை மாற்றி, இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் குறித்து கருத்துத் தெரிவித்த மொன்றியல் மேயர் சொரயா மார்டினெஸ் பெர்ராடா (Soraya Martinez Ferrada), ஊழியர்களிடையே ஒருங்கிணைப்பையும், நேரடி கலந்துரையாடல்களையும் வளர்ப்பதே இதன்
நோக்கம் எனத் தெரிவித்தார்.
தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் போக்கைப் பின்பற்றி வருவதால், மாநகரசபையும் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மாநகரசபை ஊழியர்களின் சங்கம் (SFMM) இந்த முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மொன்றியல் நகர மையப்பகுதியை (Downtown) மீண்டும் சுறுசுறுப்பாக்க வேண்டும் என வர்த்தக சம்மேளனம் விடுத்த கோரிக்கைக்குப் பணிந்தே மாநகரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
