வவுட்ரெயில்-ஹட்சன் (Vaudreuil-Hudson) வழித்தடத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சரக்கு ரயில் விபத்தைத் தொடர்ந்து, இன்றும் இரண்டாவது நாளாக ரயில் சேவைகள் முழுமையாகச் சீரடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடம் புரண்ட ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்ட போதிலும், பாதுகாப்பு சோதனைகள் காரணமாகப் போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. வவுட்ரெயில் (Vaudreuil) மற்றும் செயின்ட்-அன்-டி-பெல்லுவ் (Sainte-Anne- de-Bellevue) இடையிலான ரயில் போக்குவரத்து இன்னும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளில் ரயில்கள் இயக்கப்பட்டாலும், அவை வழக்கமான நேரத்தை விட குறைந்தது 15 நிமிடங்கள் தாமதமாகவே வந்து சேரும் என எக்சோ (Exo) நிறுவனம் அறிவித்துள்ளது.
தடம் புரண்ட இரண்டு வெற்று ரயில் பெட்டிகளை கனடியன் பசிபிக் கன்சாஸ் சிட்டி (CPKC) ஊழியர்கள் வெற்றிகரமாக அகற்றிவிட்டனர். இருப்பினும், விபத்தினால் தண்டவாளங்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான தீவிர ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
