மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு சட்டமூலம் (Omnibus Bill), அகதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக மொன்றியலைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், அது பாரிய நாடுகடத்தல் செயற்பாடுகளுக்கு (Mass Deportations) வழிவகுக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். புதிய சட்டத்தின்படி, ஒரு நபர் கனடாவுக்கு வந்து ஒரு ஆண்டைக் கடந்திருந்தால், அவர் அகதித் தஞ்சம் கோருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போர் மற்றும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அனுபவங்களை வெளியே சொல்லப் பல ஆண்டுகள் எடுக்கும் நிலை காணப்படுகின்றது. அதேபோல, ஒரு நாட்டில் திடீரெனப் போர் வெடித்தால், ஏற்கனவே கனடாவிலுள்ள அந்த நாட்டைச் சேர்ந்த மாணவர்களோ அல்லது தொழிலாளர்களோ மீண்டும் சொந்த நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்படும்.
இவ்வாறான சூழல்களில், இந்த ”ஓராண்டு விதிமுறை” அவர்களைப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளும் என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இச்சட்டத்தின் ஊடாக, குடிவரவு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் மூலம், எந்தவொரு குழுவினரின் நிரந்தர வதிவிட (PR) விண்ணப்பங்களையும் அல்லது அனுமதிப் பத்திரங்களையும் எவ்வித விசாரணையுமின்றி ரத்து செய்ய முடியும்.
அகதிகள் மற்றும் ஆவணமற்ற தொழிலாளர்களின் அந்தரங்கத் தகவல்களைப் பல்வேறு அரசுத் துறைகளுடன் பகிர்ந்துகொள்ளவும் இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது. பணியிடங்களில் உரிமையாளர்களால் சுரண்டப்படும் தொழிலாளர்கள், அது குறித்துப் புகார் அளித்தால், உரிமையாளர்கள் அவர்களைக் குடிவரவுத் துறையிடம் காட்டிக்கொடுத்து நாடுகடத்தச் செய்யும் அபாயம் இதில் உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
