தனது இரண்டு பிள்ளைகளை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த வழக்கில், கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த கமல்ஜித் அரோரா (Kamaljit Arora, 49) என்பவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மொன்றியலுக்கு அருகிலுள்ள லாவல் (Laval) பகுதியில் உள்ள தனது இல்லத்தில், கமல்ஜித் அரோரா தனது 11 வயது மகன் மற்றும் 13 வயது மகளை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்தார்.
பின்னர் தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றபோது, அவரது மூத்த மகள் குறுக்கிட்டுத் தனது தாயைக் காப்பாற்றினார். இந்த வழக்கை விசாரித்த ஜூரிகள் குழு (Jury), கமல்ஜித் அரோரா திட்டமிட்டு இந்தக் கொலைகளைச் செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தியது.
இரண்டு பிள்ளைகளைக் கொன்றதற்காக அவருக்கு முதல் நிலை கொலை (First-degree murder) குற்றச்சாட்டின்கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தனது மனைவியைக் கொல்ல முயன்றமை மற்றும் மூத்த மகளைத் தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
கனடிய சட்டப்படி, முதல் நிலைக் கொலைக் குற்றத்திற்காக அவருக்குத் தானாகவே ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. அதன்படி, அவர் குறைந்தது 25 ஆண்டுகளுக்குப் பிணையில் (Parole) வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனைய குற்றச்சாட்டுகளுக்கான தண்டனை விவரங்கள் வரும் மே மாதம் அறிவிக்கப்படவுள்ளன.
