ரஷ்யாவின் நிழல் கப்பற்படை (Shadow Fleet) மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாகத் தளர்த்தியுள்ள போதும், அந்தத் தடைகளை தொடர்ந்து நீட்டிப்பதாக கனடா அறிவித்துள்ளது.
பிரதமர் மார்க் கார்னி அந்த அறிவித்தலை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனைச் சமாளிக்க, கடலில் ஏற்கனவே பயணித்துக் கொண்டிருக்கும் ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்கள் எரிபொருள் வணிகத்தில் ஈடுபடுவதற்கு, 30 நாட்கள் கால அவகாசம் அளித்து, அமெரிக்க திறைசேரித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது உலக எரிசக்தி சந்தையை நிலைப்படுத்துவதற்கான ஒரு குறுகிய கால நடவடிக்கை என்று அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த நிலையில், நோர்வேயில் நடைபெறும் நேட்டோ (NATO) இராணுவப் பயிற்சியைப் பார்வையிடச் சென்ற பிரதமர் மார்க் கார்னி, அங்கிருந்தபடி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விடயம் தொடர்பில் கனடாவின் நிலைப்பாட்டை விளக்கினார்.
ரஷ்யாவும் ஈரானும் இணைந்து உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்த எண்ணெய் வருமானமே முக்கிய ஆதாரமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். எனவே, ரஷ்யாவின் நிழல் கப்பற்படை மீதான கனடாவின் தடைகளில் எந்த மாற்றமும் இருக்காது என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் நார்வே பிரதமர் ஜோனாஸ் ஸ்டோர் ஆகியோரும் கனடாவின் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
