மொன்றியல் நகர மையப்பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபரை கைது செய்யும் முயற்சியில், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன் காரணமாக ஏற்பட்ட, எதிர்பாராத வாகன விபத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
பெர்ரி-யூகாம் (Berri-UQAM) மெட்ரோ நிலையம் மற்றும் பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகே ஒரு நபர் கத்தியுடன் நடமாடுவதை ரோந்துப் பணியில் இருந்த போலீசார் கவனித்தனர்.
அந்த 34 வயது மதிக்கத்தக்க நபரை சரணடையச் சொன்னபோது, அவர் போலீசாரை நோக்கி ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகத் தெரியவருகின்றது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் முதலில் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் மின்சார அதிர்வு கருவியைப் (Taser) பயன்படுத்தினர்.
எனினும், அந்த நபர் பணிய மறுத்ததால், ஒரு போலீஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் அந்த நபரை நோக்கிச் சுட்டார்.
இந்த நடவடிக்கையின் போது, இரண்டு போலீஸ் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மூன்று போலீஸ் அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


