தனது காதலனின் 4 வயதுக் குழந்தையை மிகக் கொடூரமான முறையில் அடித்துக் கொன்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஸ்டெபானி மியூனியர் (Stéphanie Meunier), தமக்கு முன்கூட்டியே பிணை வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த மனு, மொன்றியல் நீதிமன்றத்தில் பாரிய சட்ட விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு 4 வயதுச் சிறுவன் ஜெரமி பாஸ்டியன்-பெர்ரான் (Jérémy Bastien-Perron) கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், ஸ்டெபானி மியூனியருக்கு 25 ஆண்டுகள் வரை பிணையின்றி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது சிறையில் 15 ஆண்டுகளை தாம் கடத்தியுள்ள நிலையில், குற்றவியல் சட்டத்தில் முன்னரிருந்த ஒரு விதியைப் பயன்படுத்தி, தமக்கான பிணைக் காலத்தைக் குறைக்கக் கோரி அவர் விண்ணப்பித்துள்ளார்.
எனினும், இக்கொடூரக் கொலையாளிக்கு எக்காரணம் கொண்டும் தண்டனைக்காலம் முடிவடையும் முன்னரே, பொதுவெளியில் நடமாட அனுமதி வழங்கக் கூடாது என, பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
தற்போது இந்த மனுவை விசாரித்துவரும் மொன்றியல் நீதிமன்றத்தில், மியூனியரின் தரப்பு மற்றும் அரசுத்தரப்புக்கு இடையே கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


