மொன்றியல் பிராந்தியத்தில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவுப் பேரணி ஒன்றின் போது, அரசியல் தலைவர்களின் உருவப்பொம்மைகள் தூக்கிலிடப்படுவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகள்
அரங்கேற்றப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் (Itamar Ben-Gvir) ஆகியோரின் உருவப்பொம்மைகள்
தூக்கிலிடப்படுவது போன்ற காட்சிகள் அந்தப் பேரணியில் காட்டப்பட்டன.
இச்சம்பவம் சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் திட்டமிட்டு இழைக்கப்பட்ட ஒரு வெறுப்புப் பிரச்சாரம் எனக் கருதப்படுகிறது. அதனால், இது குறித்து மொன்றியல் பொலிஸ் திணைக்களத்தின் (SPVM) விசேட வெறுப்புக் குற்றப் பிரிவு (Hate Crimes Unit) தற்பொழுது உத்தியோகபூர்வ குற்றவியல் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கு இடையே நீடித்து வரும் தீவிரப் போர்ச் சூழலுக்கு மத்தியில், மொன்றியலின் வீதிகளில் திரண்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய
பேரணியிலேயே, இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் போலி மரணதண்டனை (Mock Hangings) காட்சி காட்சிப்படுத்தப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் மிக வேகமாகப் பரவின. இதனையடுத்து மக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் வெளிப்பட்டதைத் தொடர்ந்து மொன்றியல் பொலிஸார் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
மொன்றியல் பிராந்தியத்தில் வாழும் அனைத்துச் சமூகத்தினரும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உரிமையைக் கொண்டுள்ளனர் எனவும் எவ்விதமான வெறுப்புக் குற்றங்களும், வன்முறையைத் தூண்டும் செயல்களும் கியூபெக் மண்ணில் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது எனவும் மொன்றியல் பொலிஸ் திணைக்களம் தனது அறிக்கையில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
