கனடாவில் இருந்து பிரிந்து செல்வது குறித்து அல்பர்ட்டா மாகாண அரசு அக்டோபர் மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ள வாக்கெடுப்பின் வினா வடிவம், மக்களைத் தவறாக வழிநடத்தும் ஒரு அபாயகரமான ஏமாற்று வித்தை (Dangerous Bluff) என்று கனேடியப் பிரதமர் மார்க் கார்னி சாடியுள்ளார்.
பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசிடம் கூடுதல் பலத்தைப் பெறுவதற்காக இத்தகைய பிரிவினை ஆயுதத்தைப் பயன்படுத்துவது அல்பர்ட்டா மாகாணப் பொருளாதாரத்திற்கே பேரழிவாக முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய நாடாளுமன்றம் தெளிவுச் சட்டத்தின் (Clarity Act) கீழ் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) அண்மையில் மாகாணப் பிரிவினைக்கான முதற்கட்ட சட்டப் படிவக் கேள்வியை உத்தியோகபூர்வமாக வெளியிட்டதைத் தொடர்ந்து, ஒட்டாவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே பிரதமர் மார்க் கார்னி தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிரெக்ஸிட் (Brexit) விவகாரத்தின் போது, தான் இங்கிலாந்து வங்கியின் (Bank of England) ஆளுநராகப் பணியாற்றிய அனுபவத்தை, இங்குக் கோடிட்டுக் காட்டிய பிரதமர் கார்னி, இத்தகைய வாக்கெடுப்புகள் எவ்வாறு கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் என்பதை விளக்கினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான வாக்கெடுப்பில் சாதகமாக வாக்களித்தால் மென்மையான முறையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று பிரிட்டனில் கூறப்பட்டது என்று கூறிய மார்க் கார்னி, ஆனால் 10 ஆண்டுகள் கடந்தும், பிரித்தானிய மக்கள் தாங்கள் எதற்காக வாக்களித்தோம் என்று தெரியாமல், அதன் பொருளாதாரப் பேரழிவை இன்றும் சரி செய்யப் போராடி வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
இதேபோன்றதொரு குழப்பமான வினா 1995 ஆம் ஆண்டு கியூபெக் பிரிவினை வாக்கெடுப்பின் போதும் பயன்படுத்தப்பட்டதை மார்க் கார்னிசுட்டிக்காட்டினார்.
முழுமையான சுதந்திரம் என்று கூறாமல் புதிய பொருளாதாரக் கூட்டாண்மை என்ற பெயரில் 1995 ஆம் ஆண்டில் கியூபெக் அரசு, மக்களை திசைதிருப்ப முயன்றதாகக் கார்னி விமர்சித்தார். முன்னாள் கியூபெக் வாக்கெடுப்புகளுக்குப் பிறகு கனடாவில் கொண்டுவரப்பட்ட தெளிவுச் சட்டம் (Clarity Act) தற்போதைய அல்பர்ட்டா விவகாரத்தில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.