கியூபெக்கின் லாவால் (Laval) பகுதியில் உள்ள தனியார் சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்து இரண்டு வயது சிறுவன் ஒருவன் தப்பிச் சென்று, வீதியில் தனியாகத் திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக அவ்வழியே சென்ற வாகன ஓட்டி ஒருவரால் அச்சிறுவன் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாவால் நகரின் சோமெடி (Chomedey) பகுதியில் உள்ள ஒரு வீதியில், சிறுவன் ஒருவன் மிகவும் குழப்பத்துடன் தனியாக நிற்பதை மரியா சந்தினோ என்ற பெண்மணி கவனித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்தச் சாலையில் விபத்து ஏதும் நடப்பதற்கு முன்னதாகவே, மரியா தனது வாகனத்தை நிறுத்தி சிறுவனை மீட்டுள்ளார்.பின்னர் அவர் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார். பொலிஸார் நடத்திய விசாரணையில், அந்தச் சிறுவன் அருகில் உள்ள ஒரு வீட்டில் இயங்கி வரும் தனியார் காப்பகத்திலிருந்து (Home Daycare) தப்பி வந்தமை தெரியவந்தது.
காப்பகத்தின் பின் கதவு பூட்டப்படாமல் இருந்ததைப் பயன்படுத்தி அச்சிறுவன் அங்கிருந்து வெளியேறியுள்ளான். பொலிஸார் சிறுவனுடன் காப்பகத்தினைத் தொடர்புகொள்ளும்வரை ஒரு குழந்தை காணாமல் போன விபரமே அங்குள்ள ஊழியருக்குத் தெரியவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இது அங்கீகாரம் பெறாத (Unlicensed) ஆனால் சட்டப்பூர்வமாக இயங்க அனுமதிக்கப்பட்ட ஒரு சிறிய இல்லக் காப்பகம் எனவும் கியூபெக் சட்டப்படி இத்தகைய காப்பகங்களில் 6 குழந்தைகளுக்குக் குறைவாகவே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தச் சிறுவர் காப்பகத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
