ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் தோல்வியடைந்த ‘ஃபீனிக்ஸ்’ (Phoenix) சம்பளக் கொடுப்பனவு அமைப்பின் பிழைகள் காரணமாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பல வருடங்கள் பழமையான மிகை ஊதியத்தை (Overpayments) வசூலிக்க மத்திய அரசு தற்போது தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
மிகை ஊதியம் பெற்ற தற்போதைய மற்றும் முன்னாள் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படவுள்ளன.
அத்துடன், கனடா வருவாய் முகவரகம் (CRA) மற்றும் தனியார் கடன் வசூல் நிறுவனங்கள் (Private Collection Agencies) மூலமும் பணத்தை மீட்க அரசாங்கம் முயல்வதாகக் கூறப்படுகிறது.
இந்த வசூல் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கனடாவின் மிகப்பெரிய பொதுத்துறை ஊழியர் சங்கமான பொதுச் சேவை கூட்டமைப்பு (PSAC) கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
காரணம், பல மிகை ஊதியங்கள் வழங்கப்பட்டு ஆறு ஆண்டுகளைத் தாண்டிவிட்டதால், அவை சட்டப்படி வசூலிக்க முடியாத ‘காலாவதியான கடன்’ (Statute-barred debt) வரம்புக்குள் வந்துவிட்டன என்று பொதுச் சேவை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
