பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கெலோனா நகரின் வடக்கே பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
‘எலிசன் தீ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த காட்டுத்தீயால், கெலோனா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தற்போது கட்டுக்கடங்காமல் பரவி வரும் இத்தீ, சுமார் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் எரிந்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கெலோனா மத்திய நகரில் இருந்து சுமார் ஒன்பது கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ள எலிசன் பகுதியில் இந்த காட்டுத்தீ தொடங்கியது.
தீயை அணைக்கும் பணிகளில் எலிசன் தீயணைப்புத் துறை, கெலோனா தீயணைப்புத் துறை மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ சேவை (BC Wildfire Service – BCWS) ஆகியவை, இணைந்து செயல்பட்டு வருகின்றன.
கெலோனா காவல்துறையின் தகவலின்படி, இந்த தீ போஸ்டில் ஏரி மற்றும் சுற்றியுள்ள ஏரிகளை நோக்கி பரவி வருகிறது.
இந்த ஏரிப் பகுதிகளில் பல முகாம்களும் வீடுகளும் உள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ராக்ஃபேஸ் சாலை, அப்பர் பூத் சாலை மற்றும் டெட் பைன் சாலைப் பகுதிகளில் தந்திரோபாய வெளியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
