வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், பிரதமர் மார்க் கார்னி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகம் திரும்புவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு எனப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
2018-ஆம் ஆண்டு வெனிசுலா தேர்தலில் மதுரோ முறைகேடாக வெற்றி பெற்றதிலிருந்து, அவரது ஆட்சியைத் கனடா அங்கீகரிக்கவில்லை என்பதைப் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
வெனிசுலா மக்கள் தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க
வேண்டும் என்றும், ஒரு அமைதியான ஆட்சி மாற்றமே தற்போதைய தேவை என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் நடவடிக்கையை நேரடியாகக் கண்டிக்காத பிரதமர் கார்னி, சர்வதேசச் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதை மட்டும்
வலியுறுத்தினார்.
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) இதனை ஒரு பயங்கரவாத ஒடுக்குமுறை" என வரவேற்றுள்ளார்.
மதுரோ ஒரு சோசலிச சர்வாதிகாரி மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதி எனவும் அவர் சிறையில் தான் இருக்க வேண்டும், எனவும் கூறியுள்ள பியர் பொய்லிவ்ரே, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மதுரோவின் ஆட்சி மோசமானது என்பதை ஏற்றுக்கொண்டாலும், இராணுவ பலத்தைப் பயன்படுத்தி ஒரு நாட்டை ஆக்கிரமிப்பது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என, பிளாக் கியூபெக் கவலை தெரிவித்தது.
இதேவேளை, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, கனடாவின் எண்ணெய் ஏற்றுமதியைப் பாதிக்கலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வெனிசுலா விவகாரத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கனடா அரசாங்கம் தனது சர்வதேச நட்பு நாடுகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
