பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெள்ளித்திரை யில் வெளியாகவிருந்த இயக்குநர் பிரபு சாலமனின் ‘கும்கி-2’ திரைப்படத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைத்திருந்த நிலையில், திட்டமிட்ட வெளியீட்டுக்கு ஒரு நாள் முன்பு நீதிமன்ற உத்தரவு “பெரும் அதிர்ச்சியை தந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
‘கும்கி-2’ படத்தை வெளியிடத் தடை கோரி, சினிமா தயாரிப்பாளர்; சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
‘கும்கி-2’ தயாரிப்புக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபு சாலமன் தன்னிடம் இருந்து ரூ.1.50 கோடி கடன் பெற்றதாகவும், வட்டியுடன் சேர்த்து இந்தப் பணத்தை படத்தின் வெளியீட்டிற்கு முன் திருப்பித் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட்டியுடன் சேர்த்து ரூ. 2.50 கோடி திருப்பித் தரப்படாத நிலையில், படத்தை வெளியிட அறிவித்ததால் தடை விதிக்கக் கோரி அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், சந்திரபிரகாஷ் ஜெயினின் கோரிக்கையை ஏற்று, ‘கும்கி-2’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

