ஒட்டாவாவில் நடைபெற்ற போருக்கு எதிரான, பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது, ஒரு பெண் மீது தாக்குதல் நடத்திய சுவிஸ் பிரஜையான டேவிட் மிகாயேல் ஹென்ஷல் (David Mikha’El Henschel), தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி ஒட்டாவாவில் இந்த ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது.
இந்தச் சம்பவம், கனடாவின் மிகப்பெரிய பாதுகாப்புத் துறை கண்காட்சியான CANSEC மாநாடு நடந்த EY Centre க்கு வெளியே நடந்தது.
கைது செய்யப்பட்ட மறுநாளே விடுவிக்கப்பட்ட ஹென்ஷல், சுவிட்சர்லாந்தில் உள்ள தனது இருப்பிடத்திற்குத் திரும்பினார்.
நேற்றைய தினம் காலை இந்தோனேசியாவிலிருந்து காணொளி அழைப்பு மூலம் கனேடிய நீதிமன்றத்தில் அவர் முன்னிலையானார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்ட ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைகள் அறிக்கையின்படி, CANSEC மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஹென்ஷல் ஒரு பெண்ணுடன் EY Centre நோக்கி நடந்து சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது ஓர் ஆர்ப்பாட்டக்காரரைக் கடந்து செல்லும்போது, “ஷாலோம்” என்று ஹீப்ரு மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
ஹென்ஷல் தொடர்ந்து மாநாட்டு மையத்தை நோக்கி நடந்து செல்லும்போது, ஆர்ப்பாட்டக்காரர்களைப் பார்த்து, தான் “இனவெறி பிடித்தவன், பெருமைப்படுகிறேன்” என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், ஹென்ஷல் ஒரு பெண்ணைத் தாக்கி மற்றொரு ஆர்ப்பாட்டக்காரரைத் தள்ளியதையடுத்து, ஒரு சிறிய சலசலப்பு அங்கே ஏற்பட்டது.
உடனடியாக காவல்துறை அவரைக் கைது செய்தது.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஹென்ஷல் 5,000 டாலர் ரொக்கப் பிணையைச் செலுத்தி விடுவிக்கப்பட்டார்.
ஹென்ஷலுக்கு எதிர்வரும் நவம்பர் 24 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
