கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள குவாடேவில்லி (Quadeville) கிராமத்தில், 8 வயது சிறுமி மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, 17 வயது இளைஞர் ஒருவர் மீது கொலை முயற்சி மற்றும் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில், இந்தத் தாக்குதலுக்கு ஒரு விலங்கு காரணமாக இருக்கலாம் என மாகாண காவல்துறையினர் (OPP) சந்தேகம் தெரிவித்திருந்தனர்.
கடந்த ஜூன் 24ஆம் திகதி, எட்டு வயது சிறுமி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஜூன் 25ஆம் திகதி அதிகாலை 12:30 மணியளவில், ரென்ஃப்ரூவிற்கு (Renfrew) சுமார் 60 கிலோமீட்டர் தென்மேற்கே அமைந்துள்ள இந்த கிராமத்தின் காட்டுப் பகுதியில், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் அவர் கண்டெடுக்கப்பட்டார்.
அப்போது, சிறுமியின் காயங்களுக்கு விலங்குத் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்தனர்.
ஆனால், ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிழக்கு ஒன்ராறியோவைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் மீது கொலை முயற்சி மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்கள் மீது ஆயுதத்தால் பாலியல் வல்லுறவு செய்தமைக்கான குற்றச்சாட்டுகள் செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இளைஞரின் வயதின் காரணமாக, கனடாவின் இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் (Youth Criminal Justice Act) அவரது பெயரை வெளியிட முடியாது.
பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
