சர்ச்சைக்குரிய அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான 30 லட்சம் கோப்புகள் அண்மையில் அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டன. இவற்றில் கனடாவின் மொண்ட்ரியல் நகரம் மற்றும் கியூபெக் மாகாணம் குறித்த நூற்றுக்கணக்கான விபரங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெளியாகியுள்ள மின்னஞ்சல்களின்படி, மொண்ட்ரியல் நகரை எப்ஸ்டீன் தனது முக்கியமான ஓய்விடமாகக் கருதியது தெரியவந்துள்ளது. 2014-ஆம் ஆண்டு மொண்ட்ரியலில் நடைபெற்ற நகைச்சுவை விழாவில் பங்கேற்க அவர் அங்குள்ள பிரபல ரிட்ஸ் – கார்ல்டன் (Ritz-Carlton) விடுதியில் அறைகளை முன்பதிவு செய்துள்ளார்.
பிரஞ்சு மொழியைக் கற்கவும், தனிமையில் பொழுதைக் கழிக்கவும் மொண்ட்ரியல் உலகின் இரண்டாவது சிறந்த இடம் என்று அவர் புகழ்ந்து எழுதியுள்ளதும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மொண்ட்ரியலைச் சேர்ந்த கிரிப்டோகரன்சி தொழிலதிபர் ஆஸ்டின் ஹில் (Austin Hill) என்பவரின் பெயரும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை, ஆஸ்டின் ஹில் பலமுறை எப்ஸ்டீனைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
எப்ஸ்டீனுக்குச் சொந்தமான சர்ச்சைக்குரிய லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவுக்கும் அவர் சென்று வந்துள்ளார். இதேவேளை, கோப்புகளில் பெயர் இடம்பெற்றுள்ளசர்க் டி சோலைல் (Cirque du Soleil) நிறுவனர் கய் லாலிபர்ட்டே உள்ளிட்ட பல கியூபெக் பிரமுகர்கள், தங்களுக்கு எப்ஸ்டீனுடன் தனிப்பட்ட நெருக்கம் ஏதுமில்லை என்று விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
