காசா பகுதியிலிருந்து பாதுகாப்புத் தேடி கியூபெக் மாகாணத்திற்கு வந்த ஏராளமான குடும்பங்கள் தற்போது அத்தியாவசிய பொது சுகாதாரக் காப்பீடு இல்லாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன.
போரின் கொடூரங்களில் இருந்து தப்பி வந்த இந்த குடும்பங்களுக்கு, ஆரம்ப மூன்று மாத கால சுகாதாரக் காப்பீடு மட்டுமே கிடைப்பதால், அவர்கள் மருத்துவச் செலவுகளால் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்த நிலைமை சுகாதார நிபுணர்கள் மற்றும் நலன்புரி அமைப்புகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதார சேவைகளை வழங்கத் தவறியதற்காக கியூபெக் மாகாண அரசானது, கடந்த மாதம் 70க்கும் மேற்பட்ட சிவில் சமூகத்தினர் மற்றும் சுகாதார அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
“காசா மக்களுக்கான சுகாதார சேவைகளை வழங்க மறுக்கும் ஒரே மாகாணம் கியூபெக் தான்,” என்று லா ப்ரெஸ் (La Presse) பத்திரிகையில் வெளியான ஒரு திறந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காசா குடும்பங்கள் ஒரு சிறப்புத் திட்டத்தின் கீழ் தற்காலிக வதிவிடதாரர்களாக கனடாவிற்கு வந்துள்ளனர்.
அவர்களின் வீசா மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் நிலையில், ஆரம்ப மூன்று மாதங்களுக்குப் பிறகு சுகாதாரக் காப்பீடு வழங்குவது மாகாண அரசுகளின் பொறுப்பு என, கனேடிய மத்திய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
