கனடாவின் மனிடோபா மாகாணம் முழுவதும் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக மாகாணம் தழுவிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மாகாணத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதாலும், தீயணைப்புக்கான தீவிர சவாலான வானிலை நிலவுவதாலும் இந்த அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட அவசர எச்சரிக்கை தெரிவிக்கிறது.
17,000 மக்கள் தங்கள் வாழிடங்களிலிருந்து வெளியேற்றபடவுள்ளதாக, மனிடோபா மாகாண முதல்வர் வப் கினிவ் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மக்களின் நினைவில் இருக்கும் மனிடோபாவின் மிகப்பெரிய இடப்பெயர்வாக இதுவாக இருக்கும் என்று அவர் கூறினார்.
1997 ஆம் ஆண்டில் ரெட் ரிவர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட “நூற்றாண்டின் வெள்ளம்” காரணமாக சுமார் 25,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்த சம்பவத்திற்குப் பிறகு, இதுவே மிகப்பெரிய வெளியேற்ற நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்கள் வின்னிபெக்கிற்கு (Winnipeg) அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், சமூக மையங்கள், கால்பந்து மைதானங்கள் மற்றும் அரங்குகள் போன்ற பெரிய இடங்களில் தங்கவைக்கப்படுவார்கள் என்று, மனிடோபா மாகாண அரசு தெரிவித்துள்ளது.
