அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் கனேடிய பிரதமர் கார்னியும் இருநாடுகளுக்கும் இடையிலான விவகாரங்கள் குறித்து, தமது மதிய உணவின்போது கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது விதிக்கப்பட்டுவரும் வரிகள், இருநாடுகளுக்கு இடையிலான வெளியுறவுக் கொள்கை மற்றும் கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறுவது பற்றிய டிரம்ப்பின் கருத்து முதலான விடயங்கள் அங்கு கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவருகின்றது.
கனடிய பொருட்கள் மீதான வரிகளை நீக்குமாறு மார்க் கார்னி அமெரிக்க ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.
கனடா நாடானது அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறுவது என்ற கருத்தை, இந்த கலந்துரையாடலின் போது டிரம்ப் முன்வைத்தார்.
எனினும், அச்செயற்பாட்டில் இருதரப்பும் ஒன்றுபட்டால் தான் அது நடைபெறும் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து நடந்த மதிய உணவின் போதான உரையாடலின் போது, வெளியுறவுக் கொள்கை சார்ந்த விடயங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர், சீனா – ஈரான், இஸ்ரேல்-காஸா மற்றும் ஏமனில் உள்ள ஹவுதிகள் குறித்து, மார்க் கார்னியின் கருத்தை டிரம்ப் கேட்டறிந்தார்.
போதைப்பொருள் நெருக்கடி குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.
கனடா போதைப்பொருளின் முக்கிய ஆதாரம் அல்ல என்றும் கனடாவின் எல்லைகளில் போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளைப் பற்றியும் கார்னி அமெரிக்க ஜனாதிபதிக்குத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு சாதனங்களையே கனடா அதிகமாக வாங்குவதை ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.