காஸாவுக்கு உணவுப் பொருட்கள் செல்வது இஸ்ரேலால் தடுக்கப்பட்டதை லிபரல் கட்சித் தலைவரும் கனேடிய பிரதமருமான மார்க் கார்னி கண்டித்துள்ளார்.
உணவு ஓர் “அரசியல் கருவியாக” பயன்படுத்தப்படக்கூடாது என்று, அவர் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலின் தொடர்ச்சியான முற்றுகையின் காரணமாக காஸாவில் தனது உணவுக்கையிருப்புகள் தீர்ந்துவிட்டதாக, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தை செயற்பட அனுமதிக்குமாறு மார்க் கார்னி இஸ்ரேலைக் கோரியுள்ளார்.
ஹமாஸின் நடவடிக்கைகளுக்காக பாலஸ்தீனிய பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து முக்கிய எல்லைப் பாதைகளும் மூடப்பட்டதால் ஏழு வாரங்களுக்கும் மேலாக எந்த மனிதாபிமான அல்லது வணிகப் பொருட்களும் காஸாவிற்குள் நுழையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.