இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் ஞாயிறு வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார்.
இவ்விஜயத்தின்போது, பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
இலங்கையில் தங்கியிருக்கும்போது, இந்தியப் பிரதமர் அநுராதபுரத்துக்குச் சென்று புனித ஸ்ரீ மகா போதியை வழிபடவுள்ளதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களையும் தொடக்கி வைப்பார்.
இவ்விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையே கைச்சாத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாற்றிக்கொள்ளப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் இந்திய அரசின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
பாதுகாப்பு ஒப்பந்தமொன்றும் இன்று கைச்சாத்திடப்படலாமெனத் தெரிகிறது.சம்பூரில் மின் திட்டமொன்றை ஆரம்பிக்க திருகோணமலைக்கு பிரதமர் செல்லவிருந்த போதும் பாதுகாப்புக் காரணங்களையொட்டி அவர் அங்கு செல்லமாட்டாரெனச் சொல்லப்பட்டது.
கொழும்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை மோடி நாளை சந்திக்கவுள்ளார்.
முன்னதாக இலங்கை புறப்பட முன்னர் தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவொன்றை இட்டார்.அதில் ஏப்ரல் நான்கு முதல் ஆறு வரையான திகதிகளில் இலங்கைக்கான இருநாள் விஜயமொன்றை மேற்கொள்கிறேன். கடந்த டிசம்பரில் ஜனாதிபதி திசாநாயக்க மேற்கொண்டிருந்த மிகவும் வெற்றிகரமான விஜயத்தைத் தொடர்ந்து இவ்விஜயம் மேற்கொள்ளப்படுகின்றது.
‘பகிரப்பட்ட எதிர்காலம் ஒன்றுக்கான பங்குடைமைகளை வலுவாக்கல்’ என்ற கூட்டு தொலைநோக்கு குறித்த முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கு இதன்போது சந்தர்ப்பம் கிடைக்கும். அதேவேளை, நமது பகிரப்பட்ட இலக்குகளை உணர்ந்து கொள்வதற்கு மேலதிக வழிகாட்டல்களையும் இவ்விஜயம் வழங்குகின்றது.
கடந்த கால அடித்தளங்ளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இவ்விஜயங்கள், நமது மக்களின் நலன்கள் மற்றும் பரந்த பிராந்தியத்தின் நலன்களுக்காக நமது நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் பங்களிப்பு வழங்குமென நான் நம்புகின்றேன்.
மோடியின் வருகையின் போது கொழும்பு மற்றும் அநுராதபுரத்தில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம்
செயற்படுத்தப்படவுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மோடி தரையிறங்கியது முதல் 06 ஆம் திகதி அவர் செல்லும் வரை கொழும்பு உட்பட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் மற்றும் மூத்த இந்திய அதிகாரிகள் எனப் பலரும் வருகை தரவுள்ளனர்
மேல் மாகாண மூத்த டி.ஐ.ஜி. சஞ்சீவ தர்மரத்ன, மோடியின் கொழும்பு பயணத்துக்கான பாதுகாப்புகளைக் கண்காணிக்க உள்ளார். ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு மற்றும் இந்தியப் பாதுகாப்புக் குழுவும் ஒருங்கிணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.