அமெரிக்காவின் 47வது அதிபராக, ஜன, 20ல் பதவியேற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், 78, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அதிபர் டிரம்ப் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு:
மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கப்படும். எனினும், எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் உட்பட கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிசக்திக்கு, 10 சதவீத வரி விதிக்கப்படும்.
இதேபோல், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, கூடுதலாக, 10 சதவீத வரி விதிக்கப்படும். சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
எல்லையில் நடக்கும் சட்ட விரோத குடியேற்றம், போதைப்பொருள் பயன்பாடு அமெரிக்க மக்களை பெரிதும் பாதிப்பதால், கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு, எதிர்வரும் மார்ச் 4 முதல் அமலுக்கு வரும் வகையில் வரி விதிப்பு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்புகள் நீடித்தால், அது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கனடா, மெக்சிகோவுடன் சீனாவும் அமெரிக்காவுக்கு எதிராக பதில் வரிகளை விதிக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் பணவீக்கம் மிக மோசமடையக்கூடும். அதன் காரணமாக, உணவு பொருட்கள், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், வீட்டுவசதி, போக்குவரத்து விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
விலைவாசி உயர்வு காரணமாகத்தான் முந்தைய அதிபர் ஜோ பைடன் ஆட்சி மீது அமெரிக்கர்கள் கோபமடைந்தனர். தற்போது டிரம்ப் அதை விட மோசமான கட்டத்திற்கு அமெரிக்காவை கொண்டு செல்லும் விபரீத நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார். இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் பட்சத்தில் அது உலக பொருளாதாரத்தையும் படுகுழியில் வீழ்த்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் பெட்ரோலிய தேவையில் 60 சதவீதத்தை கனடா தான் பூர்த்தி செய்கிறது. கனடாவிடமிருந்து கனிமங்கள், போக்குவரத்து உபகரணங்கள், கெமிக்கல், பிளாஸ்டிக், தோல் பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இதனால் கனடா வரி விதிப்பதால் அமெரிக்காவில் இப்பொருட்களின் விலை அதிகரிக்கும். அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளிகளில் கனடா, மெக்சிகோ, சீனா முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.