கனடா மீதான இடைநிறுத்தப்பட்டிருந்த வரிகள் மார்ச் மாதம் தொடங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 25% வரியும், கனேடிய எண்ணெய் மற்றும் மின்சாரம் போன்ற எரிசக்தி பொருட்களுக்கு 10% குறைந்த வரி விதிக்கவும் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இது கனடாவின் பொருளாதார வளர்ச்சியையும், பணவீக்கத்தையும் மோசமாக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் .
இறக்குமதிகள் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை பாதிப்பதாக தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரவு செலவுத்திட்டத்தின் நிதிப்பற்றாக்குறையை குறைப்பதற்கும், தொழிலாளர்களுக்கு புதிய வேலைகளை உருவாக்குவதற்கும், அமெரிக்கா மீண்டும் பணக்காரராக மாறுவதற்கும் இறக்குமதி வரிகள் அவசியமானவை என்று வலியுறுத்தியுள்ளார்.
இதே வேளை பிரான்ஸ் ஜனாதிபதியுடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய டொனால்ட் ட்ரம்ப் தாம் சரியான நேரத்தில் வரிகளை அமுல்படுத்தி வருவதாகவும் அது மிக வேகமாக முன்னேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு கருத்து வெளியிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அமெரிக்காவும் ஐரோப்பாவும் பொருளாதாரத்தில் முன்னேற சுமூகமான வர்த்தகம் மற்றும் அதிக முதலீடுகளைக் கொண்ட ஒரு நியாயமான போட்டியை நோக்கி நகரவேண்டும் என குறிப்பிட்டார்
இதேவேளை கனடா பல எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.