ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இன்று வரை பதிவாகியுள்ள 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 11 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலால் மேற்கொள்ளப்பட்டவை. எஞ்சிய 6 சம்பவங்கள் காணி தகராறு போன்றவற்றால் இடம்பெற்றவையாகும் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இன்று (25) காலை பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்காக உதவி புரிந்தமை தொடர்பில் மொத்தமாக 49 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த காலப்பகுதியினுள் ரீ 56 ரக துப்பாக்கிகள் ஐந்தும், 6 பிஸ்டல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக இயலுமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.