கனடா மீது வரி விதிப்பது தொடர்பில் தாம் ஏற்கனவே குறிப்பிட்டதை சனிக்கிழமை நிறைவேற்ற இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் நேற்று (30.01.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மெக்ஸிகோவும் கனடாவும் வர்த்தக விவகாரத்தில் அமெரிக்காவை அவர்கள் மிகவும் நியாயமற்ற முறையில் நடத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். அவர்களிடம் உள்ள பொருட்கள் இனி எமக்கு தேவையில்லை எனவும் இதனால் நாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவிடம் தேவையான அளவுக்கு எண்ணெய் மற்றும் மரக்கட்டைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், வரி சதவிகிதம் காலத்திற்கு ஏற்றாற்போல் உயரவும் குறையவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, ட்ரம்பின் வரி விதிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கனேடிய நிர்வாகம், எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் எரிசக்தி ஏற்றுமதியை ரத்து செய்யவும் சில பொருட்கள் மற்றும் வளங்கள் மீது ஏற்றுமதி வரி விதிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கனேடிய நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.