கியூபெக் மாகாணத்தில் ‘பார்ட்டி கியூபெக்குவா‘ (PQ) கட்சி ஆட்சிக்கு வந்தால் நடத்தத் திட்டமிட்டுள்ள தனிநாடு கோரும் பொதுவாக்கெடுப்புச் செலவுகள் குறித்து வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அக்கட்சியை கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனிநாடாவதற்கான முதல் ஆண்டின் நிதியியல் திட்டத்தை வெளியிடத் தவறியதன் மூலம் ‘பார்ட்டி கியூபெக்குவா‘ கட்சி வாக்காளர்களை ஏமாற்றுவதாக, அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கியூபெக் மாகாணத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பார்ட்டி கியூபெக்குவா கட்சியின் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளமொண்டன் (Paul St-Pierre Plamondon), தங்களது கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றால் 2029 அல்லது 2030 ஆம் ஆண்டில் தனிநாடு கோரும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இதனைச் சுட்டிக்காட்டியே, கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) பார்ட்டி கியூபெக்குவா கட்சி மீது தமது விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
”வாக்கெடுப்பு நடத்துவதற்கு 130 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்று கூறும் பார்ட்டி கியூபெக்குவா, தனிநாடாகக் கியூபெக் இயங்கும் முதல் ஆண்டில் ஏற்படவுள்ள பொருளாதாரச் சுமைகள் மற்றும் நிதியியல் திட்டங்கள் குறித்து முற்றிலும் மௌனம் காக்கிறது” என்று, கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் சுட்டிக்காட்டியுள்ளார்.
”கியூபெக் மக்களின் வரிப்பணமான 130 மில்லியன் டொலர்களை இதுபோன்ற வாக்கெடுப்புகளுக்குப் வீணாக்குவதற்குப் பதிலாக, மக்கள் நலச் சேவைகளில் முதலீடு செய்ய முடியும்” என்று, அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

