கனடாவிலிருந்து கியூபெக் பிரிந்து தனிநாடாவதை தாம் தனிப்பட்ட முறையில் ஆதரிக்கிறாரா இல்லையா என்பது குறித்து வெளிப்படையான கருத்துத் தெரிவிப்பதை, கியூபெக் முதலமைச்சரும் கொவாலிசியன் அவனீர்
கியூபெக் (CAQ) கட்சியின் தலைவருமான கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) தவிர்த்துள்ளார்.
ரேடியோ-கனடா (Radio-Canada) தொலைக்காட்சியில் மாகாணத்தின் பிரதான அரசியல் தலைவர்கள் பங்கேற்ற தொடர் விவாதங்களைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் பிரெஷெட், இவ்விவகாரத்தில் எனது தனிப்பட்ட நிலைப்பாடு என்பது முக்கியமானது அல்ல. அது தற்போதைய சூழலுக்குப் பொருத்தமான தகவலும் இல்லை எனக் கூறி நேரடிப் பதிலைத் தவிர்த்தார்.
இருப்பினும், இச்சம்பவம் குறித்துப் பின்னர் சமூக ஊடகங்களில் பதிவொன்றை வெளியிட்ட அவர், கடந்த காலத்தில் பார்ட்டி கியூபெக்குவா (PQ) கட்சியின் சிரேஷ்ட அரசியல் ஆலோசகராகத் தாம் பணியாற்றிய வரலாற்றை மறுக்கப்போவதில்லை என்றும், ஆனால் அதன்பின்னர் அரசியல் ரீதியாகத் தாம் பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளதாகவும்
விளக்கமளித்தார்.
தமது தற்போதைய கொவாலிசியன் அவனீர் கியூபெக் (CAQ) கட்சியானது, தனிநாடு கோரும் பிரிவினைவாதக் கொள்கையையோ அல்லது கனடா கூட்டாட்சிக்கு முழுமையாகப் பணியும் கொள்கையையோ பின்பற்றவில்லை என்றும், மாறாகக் கனடாவுக்குள் கியூபெக்கிற்கு அதிக அதிகாரங்களைக் கோரும் சுயஆட்சி தேசியவாத(Autonomist) பாதையையே பின்பற்றுவதாகவும் பிரெஷெட் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், முந்தையபார்ட்டி கியூபெக்குவா ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட பெரும்பாலான முடிவுகள் தனிநாடு பொதுவாக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்ததாக, கியூபெக் முதலமைச்சர்
கிறிஸ்டின் பிரெஷெட் குற்றம்சாட்டியுள்ளார்.


