கியூபெக் மாகாணத்தின் ஆளுங்கட்சியான CAQ-இன் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இறுதிப் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சிக்குள் நிலவும் மோதல்களைத் தவிர்க்குமாறு மாகாண முதல்வர் பிரான்சுவா லெகோ (François Legault) கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் 12-ஆம் திகதி CAQ-கட்சியின் புதிய தலைவர் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வேட்பாளர்களான கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) மற்றும் பெர்னார்ட் டிரெய்ன்வில் (Bernard Drainville) ஆகியோருக்கு இடையிலான போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
குறிப்பாக, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதி விவாதத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டமை கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கியூபெக் முதல்வர் லெகோ “வரவிருக்கும் பொதுத் தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டுமானால், ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்” எனத் தெரிவித்தார்.
தான் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும், வெற்றி பெறுபவருக்கு அதிகாரத்தைச் சுமூகமாக ஒப்படைப்பதே தனது நோக்கம் என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
2011-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட CAQ கட்சி, தனது வரலாற்றில் முதன்முறையாகத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
