மொன்றியல் நகரில் உள்ள யூதப் பாடசாலை ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட வழக்கில் கைதான வாலிபர் ஒருவர், மொன்றியல் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பரிந்துரைத்துள்ளனர்.
மொன்றியலின் கோட்-டெ-நெஜ் (Côte-des-Neiges) பகுதியில் அமைந்துள்ள ‘யெஷிவா கெடோலா’ (Yeshiva Gedola) என்ற யூதப் பாடசாலையை இலக்கு வைத்து 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன.
இதில் 2023 நவம்பர் மாதம் 12-ஆம் திகதி அதிகாலை வேளையில் திருடப்பட்ட வாகனம் ஒன்றில் வந்து, பாடசாலைக் கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்த வழக்கில் 21 வயதான அப்திராசாக் மஹ்தி அகமட் (Abdirazak Mahdi Ahmed) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மொன்றியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதியான அப்திராசாக் மஹ்தி அகமட் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
பாடசாலைக்குள் ஆட்கள் இருக்கக்கூடும் என்பதை அறிந்தும் அலட்சியமாகத் துப்பாக்கியைப் பயன்படுத்தியமை, திருடப்பட்ட வாகனத்தை வைத்திருந்தமை மற்றும் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றக் கட்டளைகளை மீறியமை உள்ளிட்ட முக்கிய குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டார்.
வழக்கு விசாரணைகளின் போது மேற்கொள்ளப்பட்ட கூட்டுப் பரிந்துரையின் அடிப்படையில், தண்டனைக் காலத்தைக் கணக்கிட்டு, நீதிமன்றம் விரைவில் தனது இறுதித் தீர்ப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

