உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தனது மனைவியும் உக்ரைன் முதல் பெண்மணியுமான ஒலேனா செலன்ஸ்காவுடன் (Olena Zelenska) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை வரையில் மூன்று நாட்கள் நீடிக்கும் இந்த விஜயத்தின் போது, பிரதமர் மார்க் கார்னியுடன் (Mark Carney) இணைந்து கல்கரி, ரொறன்ரோ மற்றும் நோர்த் பே உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் பல்வேறு உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இச்சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வலுசக்தித் துறைகளில் கூட்டு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பான பல முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளனர்.
“உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் கனடாவின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை இந்த விஜயம் மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், நியாயமான மற்றும் நிலையான அமைதிக்கான கனடாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது” என, பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கனடாவிற்கு வருகை தருவதற்கு முன்பாக மொல்டோவாவிலிருந்து நோர்வே நோக்கிப் பயணிக்கவிருந்த அதிபர் செலன்ஸ்கியின் விமானப் பயணம், ட்ரோன் அச்சுறுத்தல் காரணமாகத் தாமதமானது.
மொல்டோவா வான்வெளியில் அனுமதி பெறாத ட்ரோன் ஒன்று ஊடுருவியதால், வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டதே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தமை குறிப்பிடத் தக்கது.

