1969-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டு, சுமார் 46 ஆண்டுகளாக அடையாளங்காணப்படாமல் இருந்த மொன்றியலைச் சேர்ந்த 19 வயது பெண் ரீட் ஜூர்வெட்சனின் (Reet Jurvetson) படுகொலை குறித்து, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் ரீட் ஜூர்வெட்சன் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பில் கனடியப் புத்தக வெளியீட்டாளரும் எழுத்தாளருமான கேத்தரின் போகார்ட்டி (Catherine Fogarty) எழுதியுள்ள புதிய நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூலில், பத்தாண்டு கால விசாரணையின் அதிர்ச்சியூட்டும் பின்னணி, பொலிஸாரின் புலனாய்வுத் தவறுகள் மற்றும் இதுவரை வெளிவராத புதிய தகவல்கள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1969-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ஆம் திகதி, லொஸ் ஏஞ்சலஸின் புகழ்பெற்ற முல்ஹாலண்ட் டிரைவ் (Mulholland Drive) பகுதியிலுள்ள புதர் ஒன்றிலிருந்து 19 வயதான இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
அவரது உடலில் 157 கத்திக்குத்து காயங்கள் காணப்பட்ட போதிலும்,
அவரிடம் எந்தவித அடையாள அட்டைகளும் இல்லாததால், அமெரிக்க பொலிஸாரால் அவரது அடையாளத்தைக் கண்டறிய முடியாமல் போனது.
46 ஆண்டுகளுக்குப் பிறகு, 2015-ஆம் ஆண்டில், காணாமல் போனோர் தொடர்பான இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட அந்தப் பெண்ணின் புகைப்படத்தை ரீட் ஜூர்வெட்சனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அடையாளம் கண்டுகொண்டனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ பரிசோதனை (DNA match) மூலம், படுகொலை செய்யப்பட்டவர் மொன்றியாலில் இருந்து 1969-ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சலஸுக்குச் சென்ற ரீட் ஜூர்வெட்சன் என்பது உத்தியோகப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
ரீட் ஜூர்வெட்சன் 1969-இல் லொஸ் ஏஞ்சலஸ் நகருக்குச் சென்ற பிறகு குடும்பத்தினருடன் தொடர்பை இழந்த போதிலும், அவர் தனது சுதந்திரமான வாழ்க்கையை வாழ்கிறார் என எண்ணி அவரது குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை.
மொன்றியலில் தான் சந்தித்த ஜான் (John or Jean) என்ற நபரைத் தேடியே ரீட் லாஸ் ஏஞ்சலஸ் சென்றுள்ளார்.
எனினும், கொலை செய்யப்பட்ட நபருக்கும் இந்த ஜான் என்பவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த விசாரணைகள் முழுமையடையவில்லை என்பதை இந்த நூல் வெளிப்படுத்தியுள்ளது.
பிரபல கொலையாளி சார்லஸ் மேன்சன் (Charles Manson) மற்றும் அவரது கூட்டாளிகளால் ஷரோன் டேட் (Sharon Tate) உட்பட பலர் படுகொலை செய்யப்பட்ட அதே காலகட்டத்தில், சில மைல் தொலைவிலேயே ரீட்டின் கொலையும் நடந்துள்ளது.
இருப்பினும் மேன்சன் கும்பலுக்கும் இதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதை உறுதி செய்ய போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

