மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து ஒரு தொகுதி மீனும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகே உள்ள கடற்படை சோதனைச் சாவடியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, டைனமைட் வெடி பொருளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது 500 கிலோ கிராமுக்கும் அதிகமான மீன்கள், ஒரு வெளி இணைப்பு இயந்திரம், ஒரு படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் மீன்பிடி நடவடிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பின்னர், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கைப்பற்றப்பட்ட மீன்கள் மேலதிக பரிசோதனைக்காக நாரா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

