மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த பயிற்சி மருத்துவ அதிகாரிகளை வரவேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.ஆசாத் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது சர்வமத தலைவர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.ஜெகதீஸ்வரன், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதன் போது குறித்த 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகளும் விருந்தினர் களினால் வரவேற்கப் பட்டனர்.அதனை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றது.
தொடர்ந்து குறித்த 8 பயிற்சி மருத்துவ அதிகாரிகளும் விருந்தினர்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்,வைத்தியர்கள்,வைத்தியசாலை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் வைத்தியர்களின் பற்றாக்குறை நீண்ட காலமாக காணப்பட்ட நிலையில்,பலரது முயற்சியினால் குறித்த 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

