திருகோணமலை மாவட்டத்தின் முத்துநகர் பகுதியில் விவசாயிகளின் நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு சூரிய மின்சார திட்டங்களுக்காக வழங்கியமைக்கு எதிராக, தொழிலாளர் தினமான இன்று கருப்பாடை அணிந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முத்துநகர் சந்தி பகுதியில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில்,
“எமது நிலம் எமக்கு வேண்டும்”| “விவசாயிகளுக்கு நீதி வேண்டும்”, “முத்துநகர் விவசாய காணிகளை மீளத் தா” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தப்பட்டிருந்தன.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பல தலைமுறைகளாக பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள் தனியார் சூரிய மின்சார திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினர். மேலும், தற்போதைய அனுர அரசாங்கம் மற்றும் சில அரசியல் பிரதிநிதிகள் தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளை மீறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்…..
“எங்கள் பூர்வீக விவசாய நிலங்களில் இருந்து எங்களை வெளியேற்றியுள்ளனர். முந்தைய அரசுகளுக்கு எதிராக எங்களோடு நின்றவர்கள் இன்று அதே திட்டங்களுக்கு ஆதரவளிக்கின்றனர்” என குற்றஞ்சாட்டினர்.
மேலும் அனுர அரசு அராஜகமாக எங்களை எங்கள் பூர்வீக காணியில் இருந்து வெளியேற்றியது எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், IMF அதிகாரிகளிடம் கூட தங்களது பிரச்சினைக்கு நீதி கோரி அழைப்பு விடுத்த அவர்கள், “முத்துநகர் மக்களின் வாழ்க்கையை காப்பாற்றுங்கள்” எனக் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்த நிலப்பிரச்சினை தொடர்பாக கடந்த மாதங்களாகவும் முத்துநகர் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
