அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முரண்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத சூழலில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரப் போர் நடவடிக்கைகளுக்கு வளைகுடா நாடுகள் எந்தவித ஆதரவும் அளிக்கக் கூடாது என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இது குறித்து ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி கருத்து தெரிவிக்கையில், அண்டை நாடுகள் அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்பட்டால் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அப்பால் உள்ள எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், அதிபர் டிரம்பின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் அணு ஆயுதப் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையே, சர்வதேச அளவில் மிக முக்கியமான வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் பிராந்தியம் எனக் குறிப்பிட்டு, அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு அமெரிக்கப் படைகள் பாதுகாப்பு வழங்கி வருவதாக அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் வளைகுடாப் பகுதியில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

