வங்கதேசத்தில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில், வாக்கெடுப்பு முறை மூலம் நாட்டின் 23-வது புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் நடைபெறுகிறது.
முன்னாள் அதிபர் முகமது ஷஹாபுதீன் உடல்நலக் குறைவு காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அரசியலமைப்பு விதிமுறைகளின்படி இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.
கடந்த 1991-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து அதிபர் தேர்தல்களிலும் வேட்பாளர்கள் எவ்வித போட்டியுமின்றி ஒருமனதாகவே தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இரு வேறு முக்கிய வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால் நாடாளுமன்றத்தில் நேரடி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் வங்கதேச தேசியவாத கட்சியின் (BNP) சார்பில் மூத்த அரசியல் தலைவரான மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீரும், எதிர்க்கட்சிகளின் 11 கட்சிகள் அடங்கிய கூட்டமைப்பு சார்பில் கர்னல் (ஓய்வு) ஓலி அகமதும் போட்டியிடுகின்றனர்.
நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உத்தின், தேர்தல் முறைகேடின்றி நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு நிகழ்வுகள் முழுவதும் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான ஆளும் பி.என்.பி. கட்சிக்கு நாடாளுமன்றத்தின் 349 தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான பெரும்பான்மை பலம் உள்ளது.
இதனால் ஆளும் கட்சியின் வேட்பாளரான மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் வெற்றி பெற்று வங்கதேசத்தின் புதிய அதிபராகப் பொறுப்பேற்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

