மொன்றியல் நகர சபையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், பொதுமக்கள் முதன்முறையாக காவல்துறை தலைவரிடம் நேரடியாக கேள்விகளை எழுப்பினர்.
குறிப்பாக, Montreal North பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக காவல்துறையில் இனவெறி மற்றும் பாகுபாடு இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த விவகாரம் கடந்த ஜூன் மாதம் மேலும் தீவிரமடைந்தது. Montreal North பகுதியில் செயல்பட்ட 16 உறுப்பினர்களைக் கொண்ட காவல் ரோந்து பிரிவை Fady Dagher கலைத்தார்.
அந்தப் பிரிவில் பணியாற்றிய சில அதிகாரிகள் இனவெறி மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குறிப்பாக, இன அடையாளம் கொண்ட பொதுமக்களின் தலைமுடியை சில அதிகாரிகள் வெட்டி, அதனை “நினைவுப் பொருளாக” வைத்திருந்ததாக கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு அதிகாரி தொடர்பற்ற வேறு சம்பவம் ஒன்றில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாகவும், மிகுந்த ஏமாற்றத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியதாகவும் காவல்துறை தலைவர் Fady Dagher தெரிவித்துள்ளார்.
இன அடிப்படையிலான காவல் கண்காணிப்பு மற்றும் பாகுபாடு இருப்பதை ஏற்கனவே தான் ஒப்புக்கொண்டிருந்தாலும், குற்றச்சாட்டுகளில் கூறப்படும் அதிகாரிகளின் நடவடிக்கைகளின் தீவிரத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஜூன் மாத சம்பவம் தனிப்பட்ட சில அதிகாரிகளின் நடவடிக்கை மட்டுமல்ல என்றும், Montreal North-இன் பல இன சமூகங்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நம்பிக்கையின்மையின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்றும் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
மொன்றியல் நகர சபையின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் Erika Alneus, இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நீண்ட காலமாக விரக்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
காவல்துறை மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வெளிப்படையான விசாரணைகளும், பொறுப்புக்கூறலும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

