நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இளைஞர்களின் எதிர்காலத்தின் முக்கியத்துவத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வலியுறுத்தினார்.
அத்துடன், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இது தொடர்பான எக்ஸ் பதிவில்
நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது வேறொன்றும் இல்லை.
தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய, விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்க முயல்பவர்கள் எவரும் தப்பவிடப்படமாட்டார்கள் – என்றார்.
இந்த நிலையில் தங்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரச் செயல்பாட்டாளர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அமைப்பின் செய்தித் தொடர்பாளரான சௌரவ் தாஸ் கூற்றுப்படி,
முதலாவதாக, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
இரண்டாவதாக, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
மூன்றாவதாக, அமைதியான முறையில் போராடியவர்கள் மீது தேவையற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் (FIR) திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதாகும்




