செம்மணி புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் காலத்தை அறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும் என குற்றப்புலனாய்வு பிரிவினர் , யாழ்ப்பாண நீதிமன்றில் விண்ணப்பம் செய்துள்ளனர்.
செம்மணி புதைகுழி வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த பகுதியில் குற்றமொன்று நடந்தது என்பது தெளிவாகவில்லை. எனவே மீட்கப்பட்ட என்புக்கூடுகள் தொடர்பில் காலத்தை அறிவதற்கு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தனர்.
அதேவேளை இதுவரை எடுத்த பிற பொருட்களுக்கான அறிக்கையை ராஜ் சோமதேவாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதென்றும், தொடர்ந்து இது சம்பந்தமாக ஒரு குழு ஒன்று அமைத்து, எதிர்காலத்தில் எவ்வாறான பரிசோதனை செய்வது தொடர்பாக நிபுணர் குழுவும் சட்டத்தரணிகளும் இணைந்து எதிர்வரும் 5ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் போது தீர்மானிப்பதாக தீர்மானிக்கப்பட்டது
அத்தோடு, இன்னும் கிடைக்கப்பெறாமல் இருக்கும் மண் மாதிரிக்கான அறிக்கையைப் பெற்றுக்கொள்வதும், பல்கலைக்கழகத்திடமிருந்தும் ஒருசில அறிக்கைகள் கோரப்பட்டிருந்தது, அது சம்பந்தமான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் மன்று கட்டளை இட்டுள்ளது
செம்மணி புதைகுழி தொடர்பிலான நிபுணர் குழுவில் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவா, சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோர் இருக்கின்றார்கள்.
அதேநேரம் சில காலத்துக்குக் காலம் எங்களுக்குத் தேவையான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சிலரை அணுகி, தேவையின் அடிப்படையில் வேறு நிறுவனங்களையும் அழைத்து இது சம்பந்தமான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
அதனடிப்படையில் மேலதிக நடவடிக்கைக்காக அவர்களுடைய கருத்துக்களைக் கேட்பதற்காகவும் வழக்கு எதிர்வரும் 5ஆம் திகதி அழைக்கப்பட இருக்கிறது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, காணாமல் போனோர் குடும்பங்கள் சார்பில் சட்டத்தரணிகளான வி.எஸ் நிரஞ்சன் மற்றும் ஞா.ரனித்தா ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் ஆணையாளர்களில் ஒருவரான மிராஜ் ரஹீம் மற்றும் யாழ்ப்பாண நீதிமன்ற சட்டத்தரணிகளும், நல்லூர் பிரதேச சபையின் சட்டத்தரணியும், பாதிக்கப்பட்டவர் சார்பில் சில சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.




