நாட்டின் வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான ராணுவக் கொள்முதல் திட்டமாகப் பார்க்கப்படும் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்புச்சேவைக்கான கொள்முதல் தெரிவின் போது, மத்திய அரசு, ஜேர்மனி நாட்டின் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
கனடா தன்னிடம் உள்ள 4 பழைய விக்டோரியா-கிளாஸ் கப்பல்களை 2035-க்குள் முழுமையாக ஓய்வுபெறச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில், தென்கொரியா தங்களால் அதிவேகமாக நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரித்து விநியோகிக்க முடியும் என்ற வாக்குறுதியை முன்வைத்திருந்தது.
இதனையடுத்து நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தைப் பெறும் போட்டியில், தென்கொரியாவே இதுவரை முன்னணியில் இருந்து வந்தது. தென்கொரியாவின் உற்பத்தி வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், ஜெர்மனி மற்றும் நோர்வே நாடுகள் தங்களது சொந்த கடற்படைக்கான தயாரிப்பு வரிசையில், உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருந்த இடங்களை, கனடாவிற்காக மாற்றியமைத்து, கனடாவுக்கு நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரிப்பதற்கு முன்னுரிமை கொடுத்துள்ளன.
இதன்படி, 2036-ஆம் ஆண்டிற்குள் முதலாவது நவீன நீர்மூழ்கிக் கப்பலையும், 2040-க்குள் அடுத்த 4 கப்பல்களையும் தயாரித்து கனடாவிடம் ஒப்படைப்பதாக ஜெர்மனி வாக்குறுதி அளித்துள்ளது. அத்துடன், இந்த தயாரிப்பு ஒப்பந்தம் தங்களுக்குக் கிடைத்தால், கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 86 பில்லியன் டொலர் அளவுக்குப் பொருளாதார ஊக்கத்தையும், பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதாக ஜெர்மனி உறுதியளித்துள்ளது.
மேலும், மானிட்டோபாவில் உள்ள ‘சர்ச்சில் துறைமுகத்தை’ (Port of Churchill) திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி மையமாக மாற்றவும், கனடாவில் விண்வெளி ஏவுதள வளாகம் (Space launch complex) மற்றும் அதிநவீன ஏவுகணை சோதனைத் தளங்களை அமைக்கவும் ஜெர்மனி முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்துள்ளது.
இந்த நிலையில், தமக்கான நீர்மூழ்கிகளைத் தயாரித்து அளிப்பதற்கான கொள்முதல் ஒப்பந்தத் தேர்வில், தென்கொரியாவின் ‘ஹன்வா ஓஷன்’ நிறுவனத்தை நிராகரித்துவிட்டு, ஜெர்மனியின் ‘திசென்க்ரூப் மரைன் சிஸ்டம்ஸ்’ (TKMS) நிறுவனத்தை மத்திய அரசு தனது முதன்மைத் தேர்வாக (Preferred bidder) முடிவு செய்துள்ளதாக நம்பகமான உத்தியோகபூர்வ ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ரோயல் கனேடிய கடற்படைக்காக (Royal Canadian Navy) 12 புதிய நவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கும், அடுத்த முப்பது ஆண்டுகளுக்கான அதன் வாழ்நாள் பராமரிப்புச் செலவினங்களுக்கும் சேர்த்து மொத்தம் 100 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நவீன நீர்மூழ்கிக்கப்பல்களைத் தயாரிக்கும் பாதுகாப்புத் திட்டத்தில் ஜெர்மனி மற்றும் நோர்வே நாட்டின் கூட்டுப் பங்களிப்புடன் வடிவமைக்கப்பட்ட ‘டைப் 212சிடி’ (Type 212CD) ரக நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது என, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இறுதி முடிவெடுத்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) தலைவர்கள் உச்சிமாநாட்டிற்குப் புறப்படுவதற்கு முன்னதாக, இம்மாபெரும் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கொள்முதல் தீர்மானத்தை, அவர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனத் தெரியவருகின்றது.

