கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கினார். அவர் கட்சித் தொடங்கி சில மாதங்களிலேயே மக்களவைத் தேர்தல் வந்தாலும் கூட அதில் போட்டியும் இல்லை யாருக்கும் ஆதவும் இல்லை என்ற நிலைப்பாட்டுடன் இயங்கத் தொடங்கினார்.
தொடர்ச்சியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் – விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் அவருடைய பேச்சு கவனம் பெற்றது. முதல் மாநாட்டிலேயே ஆளும் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். ஆனால் மத்திய அரசை அதே வீச்சுடன் அவர் விமர்சிக்கவில்லை. அன்று அவர் பேசியவிதம், தொடர்ந்து அவர் காட்டும் திமுக எதிர்ப்பு நிலைப்பாடு ஆகியன அவர் பாஜகவின் நிழலில் செயல்படுகிறார் என்ற விமர்சனங்களையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளார். அவருடைய அரசியல் நகர்வுகள் அவர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிரம் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.
அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதில் விஜய்க்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்றும் தமிழ்நாட்டிற்குள் மட்டும் இந்த ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் சிஆர்பிஎஃப் Z, Y என்றெல்லாம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு சிஆர்பிஎஃப் வீரர்களுடன் Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் இருக்கிறார்கள் கூட்டணியில் இல்லை என மத்திய அரசு பார்க்கவில்லை. அவருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என பல முகமைகள் கூறியிருக்கிறது. இதனால் மத்திய அரசு விஜய்க்கு பாதுகாப்பு தந்திருக்கிறது. தமிழ்நாடு அரசிடமும் இதுபோல பாதுகாப்பு பிரிவுகள் உள்ளது. ஆனால் ஏன் விஜய்க்கு பாதுகாப்பு தரவில்லை?
இதில் அரசியல் செய்ய நினைத்தால் அவர்களுக்கு அரசியல் அடிப்படை புரிதல் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. விஜய் பாஜகவை எதிர்க்கவில்லையா? நாங்கள் மக்களை மக்களாக பார்க்கிறோம் பாஜக அனுதாபி என்றெல்லாம் பார்பதில்லை. இந்தியாவில் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியுள்ளது”இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.