மொன்றியல் மாநகரின் கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) குடியிருப்புப் பகுதியில் கடந்த மாதம் நிகழ்ந்த, துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக, கியூபெக் மாகாணத்தின் சுயாதீன பொலீஸ் கண்காணிப்பு அமைப்பான BEI தீவிர களப் புலனாய்வில் இறங்கியுள்ளது.
இத்துப்பாக்கிச்சூட்டில் மொன்றியல் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரியான முகமது லமின் பென்ரெடோவன் (Mohamed Lamine Benredouane) மற்றும் 68 வயதான பொதுமகன் மிஷெல் மிஸ்ராஹி (Michel Mizrahi) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய கொலையாளியும் அந்த இடத்திலேயே
காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளை வைத்துள்ள பொதுமக்கள் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு, BEI அமைப்பின் அதிகாரிகள் கோரியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 22-ஆம் திகதி நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் உண்மைப் பின்னணியைக் கண்டறியும் நோக்கில், BEI அமைப்பின் புலனாய்வாளர்கள் இன்று அவென்யூ டி கோர்ட்ராய் (Avenue de Courtrai) மற்றும் டெகாரி கூட்டிணைவுச் சாலை (Décarie Boulevard) சந்திப்பில் ஒரு நடமாடும் கட்டளை மையத்தை அமைத்தனர்.
இன்று காலை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அந்தப் புலனாய்வாளர்கள் அங்கிருந்து விசாரணையை மேற்கொண்டனர். விபத்து நடந்த பகுதியில் காவல்துறையினரின் துரித நடவடிக்கை மற்றும் துப்பாக்கிச்சூடு பரிமாற்றம் நிகழ்ந்த விதம் குறித்து பல கோணங்களில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

