மொன்றியல் நகரில் அண்மையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் தாராளமாகக் கிடைக்கப்பெறும் சோவியத் காலத்து ‘SKS’ ரக அரை-தானியங்கி துப்பாக்கிகளின் புதிய விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
மொன்றியலின் கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) பகுதியில் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், மொன்றியல் பொலிஸ் அதிகாரி முகமது லமின் பென்ரெடோவன் (Mohamed Lamine Benredouane) மற்றும் பொதுமகன் மிஷெல் மிஸ்ராஹி (Michel Mizrahi) ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கனடாவில் தடையின்றி விற்கப்படும் ‘SKS’ ரகத் துப்பாக்கி என்பதை பல்வேறு தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஆயுதக் கட்டுப்பாட்டுக்காகப் போராடி வரும் நாட்டின் முதன்மை அமைப்பான ‘PolySeSouvient’ அமைப்பு, இந்த வகை ஆயுதங்களின் புதிய விற்பனையை மத்திய லிபரல் அரசு உடனடியாக அவசரச் சட்டம் மூலம் முடக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
1950-களில் சோவியத் யூனியனால் வடிவமைக்கப்பட்ட இந்த SKS துப்பாக்கிகள், கனேடியச் சந்தையில் மிகவும் மலிவான விலையில் பல ஆண்டுகளாக, விற்கப்பட்டு வந்துள்ளன. மத்திய அரசாங்கம் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல், போர்க்களங்களில் பயன்படுத்தப்படும் சுமார் 2,500 வகையான நவீனத் துப்பாக்கிகளை மக்கள் பயன்பாட்டுக்குத் தடை செய்துள்ளது. அத்துடன் அவற்றைப் பொதுமக்களிடமிருந்து திரும்பப் பெறும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.
எனினும், மொன்றியல் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ‘SKS’ ரகத் துப்பாக்கி, மத்திய அரசின் இந்த ஆயுதத்தடைப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
தற்போதைய சட்ட விதிகளின்படி, தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைக்கும் உரிமையாளர்கள், அதற்காகப் பெறும் இழப்பீட்டுப் பணத்தை (Taxpayer money) வைத்துக்கொண்டே, சந்தையில் தாராளமாகக் கிடைக்கும் புதிய SKS ரகத் துப்பாக்கியை சட்டப்பூர்வமாக வாங்க முடியும் என்ற நிலை காணப்படுகின்றது.
இதைச் சுட்டிக்காட்டியுள்ள PolySeSouvient அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹெய்டி ராத்ஜென் (Heidi Rathjen) ”ஒரு ஆபத்தான ஆயுதத்தை மீளப்பெற்றுக் கொண்ட மத்திய அரசு, அதே ஆபத்துள்ள வேறொரு ஆயுதத்தை வாங்க நிதியுதவி அளிக்கிறது” என்று விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


