பிரதமர் மார்க் கார்னி (Prime Minister Mark Carney), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) உடன் மிக நீண்ட மற்றும் ஆழமான சர்வதேசப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்தத் தொலைபேசி உரையாடல், நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பு விவகாரங்களுடன் மட்டும் சுருங்கி விடாமல், ஈரான் விவகாரம், மத்திய கிழக்கின் தற்போதைய பாதுகாப்புச் சூழல், ஆர்க்டிக் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கனடாவின் இராணுவ நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல முக்கியப் பரப்புகளை உள்ளடக்கியதாக அமைந்தது.
நாடாளுமன்றத்தின் கோடைகால விடுமுறைக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மார்க் கார்னி இத்தகவலை வெளியிட்டுள்ளார். இந்த உரையாடல் மிகவும் “ஆக்கப்பூர்வமாக” அமைந்தது என்று, அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த தொலைபேசி கலந்துரையாடலில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மற்றும் அமெரிக்க கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவர் உள்ளிட்ட, பல உயர்மட்ட வெள்ளை மாளிகை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டமைப்புக்கு இடையே ஈரானுக்கு எதிரான இராணுவ நகர்வுகளில் சில கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், இப்பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதேவேளை, நேட்டோ அமைப்பில் கனடா தற்போது தனது கடமைகளையும் பொறுப்புகளையும் மிகச் சரியாகச் செய்து வருகிறது என, அந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பாதுகாப்புத் துறைக்கான முதலீட்டை, நேட்டோவின் அதிகாரப்பூர்வ மறுஆய்வு ஆண்டான 2029ஆம் ஆண்டிற்குள் 4 சதவீதமாக உயர்த்தவுள்ளதாகவும் இதில் 2.5 சதவீதம் நேரடியாக இராணுவத்திற்கும், 1.5 சதவீதம் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளுக்கும் ஒதுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் துருக்கியின் அன்காரா (Ankara) நகரில் நடக்கவிருக்கும் நேட்டோ உச்சிமாநாட்டில், பல நூறு கோடி டொலர்கள் மதிப்பிலான புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


