ஈரான் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் கனடாவின் தூதரகங்கள் இல்லாதது, அந்தந்த நாடுகளில் வாழும் கனேடிய குடிமக்களுக்கு அவசரக் காலங்களில் உதவுவதில் நாட்டிற்குப் பெரும் பின்னடைவையும் பலவீனத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகப் பிரதமர் மார்க் கார்னி ஒப்புக் கொண்டுள்ளார். எனினும், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் (Tehran) மீண்டும் கனேடியத் தூதரகத்தைத் திறக்கும் எண்ணம் தற்போதைக்குத் தமது அரசாங்கத்திற்கு இல்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நிறைவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மார்க் கார்னி, “ஒரு நாட்டுடன் இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணுவது அல்லது அங்கு தூதரகச் சேவைகளை வழங்குவது என்பது, அந்த நாட்டின் அரசாங்கக் கொள்கைகளை முழுமையாக ஆதரிப்பதாக அர்த்தமாகாது” எனக் குறிப்பிட்டார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட மிகக் கொடூரமான இரட்டை நிலநடுக்கப் பேரழிவைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அங்கு கனேடியத் தூதர்கள் களத்தில் இல்லாததால் பாதிக்கப்பட்ட கனேடியர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்குவதில் ஒட்டாவா கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஈரானில் உள்ள கனேடியர்களை மீட்பதற்கும், நமது ‘இயற்கையான நட்பு நாடுகள் அல்லாத’ (Not natural allies) வேறு நாடொன்றின் தூதரக உதவியையே, கனடா நாட வேண்டியேற்பட்டது என்றும் அவர் கவலை வெளியிட்டார். கனடா அரசு ஈரானுடன் மீண்டும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி, ஒட்டாவா மற்றும் டெஹ்ரானில் உள்ள தூதரகங்களை மறுபடி திறக்கப் போவதாக ‘ஈரானிய நீதி கூட்டமைப்பு’ (Iranian Justice Collective) என்ற புலம்பெயர்ந்தோர் அமைப்பு அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தது.
இந்த வதந்திகளுக்குப் பதிலளித்த பிரதமர் கார்னி, “ஈரானுடன் மீண்டும் தூதரக உறவை ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசாங்கத்திற்குள் எந்தவொரு ஆலோசனையும் (No discussions) நடைபெறவில்லை” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.


