படுகொலைச் சம்பவம் தொடர்பாக, 30 வயதுடைய கியூபெக் இளைஞர் ஒருவருக்கு எதிராகக் நாடளாவிய ரீதியான கைதுக் கட்டளை (Canada-wide Arrest Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது. நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லப்ரடோர் (Newfoundland and Labrador) மாகாணத்தின் ஹபி வெளி-கூஸ் பே (Happy Valley-Goose Bay) பிராந்தியத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு அரங்கேறிய அதிர்வலையை ஏற்படுத்திய படுகொலைச் சம்பவத்தில் தொடர்பு உடையவர் என்ற நிலையிலேயே, அவர் மீது இந்த கைதுக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி, ஹபி வெளி-கூஸ் பே குடியிருப்பொன்றில் பிரான்ஸ் துரோஷ் (Franz Drosch – 43) என்ற நபர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லப்ரடோர் மாகாணப் பொலிஸ் திணைக்களத்தின் (RCMP) விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு (Major Crimes Unit) தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தது.
நீண்ட புலனாய்வின் பின்னர், இக்கொலையுடன் நேரடியாகத் தொடர்புடைய முதன்மைக் குற்றவாளி கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் பிராந்தியத்தைச் சேர்ந்த டேவிட் ஃபோஷே (David Faucher – 30) என்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. அவருக்கு எதிராக முன்கூட்டித் திட்டமிட்டு நடத்தப்பட்ட முதலாம் கட்டப் படுகொலை(First-degree Murder) குற்றச்சாட்டின் கீழ், தற்போது உத்தியோகபூர்வமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பொலிஸாரின் பிடியில் சிக்காமல் திட்டமிட்டுத் தலைமறைவாகி வருவதை (Actively evading) அடுத்து, அரச வான்படை மற்றும் மாகாணப் பொலிஸாரின் பலத்த தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அந்த சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் அவசர
உதவியும் கோரப்பட்டுள்ளது.


