கியூபெக்கிற்கு நிதியளிக்கும் இருதரப்பு உடன்படிக்கை ஒன்றை, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) ஆகியோர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
கியூபெக் மாகாணத்தின் பொதுப் போக்குவரத்து மற்றும் வீடமைப்பு உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருமளவில் நவீனப்படுத்துவதற்காக, மத்திய அரசு 10 பில்லியன் கனேடிய டொலர்களை மாகாண அரசுக்கு அளிக்கவுள்ளது.
இந்த உடன்படிக்கையின் மூலம், புதிய மத்திய பொதுப் போக்குவரத்து நிதியத்தின் கீழ், கியூபெக் மாகாணத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதிப் பங்கீடு முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது.
கியூபெக் மாகாணத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய உட்கட்டமைப்பு நிதியொதுக்கீடாக இது கருதப்படுகின்றது.
மொன்றியல் பெருநகரப் பிராந்தியத்திற்கு உட்பட்ட லோங்காய் (Longueuil) நகரில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் மார்க் கார்னியும் கியூபெக் மாகாண முதல்வரும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
புதிய மத்திய பொதுப் போக்குவரத்துத் திட்டத்தில் இருந்து இதுவரை விலக்கி வைக்கப்பட்டிருந்த ஒரேயொரு மாகாணமான கியூபெக், தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.