மனித உரிமை ஆர்வலர்களான லலித் குமார் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டு, பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில், இணையவழித் தளம் ஊடாகச் சாட்சியமளிப்பதற்கு, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தியோகபூர்வமாக இந்த அனுமதியை வழங்கியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு, தம்மால் யாழ்ப்பாண நீதிமன்றிற்கு நேரில் சமூகமளிக்க முடியாது என, கோட்டாபய ராஜபக்ச தரப்பால் முன்வைக்கப்பட்ட நீண்டகாலக் கோரிக்கையை ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து சர்வதேச மனித உரிமைகள் தினப் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துகொண்டிருந்த லலித் மற்றும் குகன் ஆகியோர் மர்மமான முறையில் கடத்தப்பட்டிருந்தனர். அவர்களின் உறவினர்களால் தொடரப்பட்ட ஆட்கொணர்வு விசேட மனு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச, நீதிமன்றில் நேரில் முன்னிலையாகாமல் தொலைநிலைக் காணொளித் தொழில்நுட்பம் (Audiovisual/Online) மூலம் சாட்சியமளிப்பதாகச் செய்திருந்த விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்துள்ளது.
லலித் – குகன் கடத்தப்பட்ட காலகட்டத்தில் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ச, இவ்விவகாரத்தில் சாட்சியமளிக்க வேண்டுமென 2019 ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் முதன்முதலில் அழைப்பாணை (Summons) விடுத்திருந்தது.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணப் பிராந்தியத்திற்கு நேரில் பயணம் செய்வது தனது உயிருக்கு அச்சுறுத்தலாக அமையலாம் எனக் குறிப்பிட்டு, கோட்டாபய ராஜபக்ச, அந்த நீதிமன்றில் முன்னிலையாவதை தொடர்ந்து தவிர்த்து வந்திருந்தார்.
எனினும், ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின் போதும், அதன் பின்னரும் கோட்டாபய ராஜபக்ச பலமுறை யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் நுவான் போபகே, பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற வாதத்தை ஏற்கக் கூடாது என நீதிமன்றில் வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
